Sunday 6 May 2012

தேரோட்டம்

ஆண்டவன் பெயரைச் சொல்லி ஆசை வந்த காரணத்தால்
ஆயிரம் தேரோட்டம் ஆண்டு தோறும் நடக்கிறது
கொண்டாட்டமாய் துவங்கும், குதூகலம் நிறைந்திருக்கும்
தேர் வரும் பாதை எல்லாம் திருவிழா போலிருக்கும்;

வடம்பிடிக்கும் பாவனையில் வருகின்ற  பலபேரில்
ஒருசிலரின் உதவியுடன் உருண்டோடும் உற்சவர் தேர்
திருப்பங்கள் வந்துவிட்டால் திட்டமிடல் அவசியமாம் 
விருப்பத்திற்கு ஏற்றவாறு விவரமின்றி வடம்பிடித்தால்
அனுபவத்தின் முதிர்ச்சியின்றி ஆளுக்கொரு திசையிழுத்தால்
ஆலயத்தேர் என்றாலும் அச்சாணி முறிந்து விடும்;

தெருவிலே நின்ற கூட்டம் தேரடி சேர்வதில்லை
தேரிலே எப்பொழுதும் மூலவர் வருவதில்லை
கடவுள் பவனி வரும் தேரோட்டம் என்பது -
காலம் இழுத்துச் செல்லும் நம் கதையை சொல்வது.


1 comment: