Saturday 22 December 2012

கால ஞானம்


இன்று என்பது நாளையின் நேற்று
இவற்றின் தொகுப்பே காலத்தின் ஊற்று
இடையே இயங்குது நம் மூச்சுக் காற்று
இப்பொழுதும் எப்பொழுதும் இதற்கில்லை மாற்று;

ஒவ்வொரு நொடியையும் அதன்வழி பார்த்து
வருகின்ற அனுபவம் வயதுடன் சேர்த்து
கடக்கின்ற அனைத்தையும் காலத்தில் கோர்த்து
காலத்தின் வழியே கடவுளை நோக்கு.

Sunday 2 December 2012

மழை நோய் மருத்துவம்...


உச்சரித்து உச்சரித்து உதடுகளில் ஊற வைத்து
நாவினிலே நனைத்தெடுத்து நரம்புகளுக்கு அனுப்பி வைத்து
உதிரத்தில் கரைந்து உயிருக்குள் பரவும்
மழையை சாப்பிட்டால் மனம் பெறும் தித்திப்பால்
ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுமா என்று
மருத்தவரிடம் கேட்டேன் மழையின் ருசியை...
மனநோயா உனக்கென மருத்துவர் கேட்டார்
மழை நோய் எனக்கென மறுமொழி சொன்னேன்.

பசி மிக அதிகம் எடுக்கிறது
பகலிலும் சோர்வு கொடுக்கிறது
வியர்வை அதிகம் வழிகிறது
வீணாய் கோபம் வருகிறது
உழைப்பின் வேகம் குறைகிறது
உணர்வும் களைப்பு பெறுகிறது
மழை பெய்ய மறுக்கும் பொழுதுகளில்
மனம் மிக அடையும் பழுதுகளால்
சர்க்கரை நோயின் அறிகுறிகள்
சாத்தியம் என்று நினைப்பதனால்
சந்தேகம் வந்தது என்று சொன்னேன்
சங்கடத்தில் அவர் நெளிந்தார்...

மாத்திரை ஏதும் இல்லையென்றும் - மழை
யாத்திரை போவதே நல்லதென்றும் - தினம்
மழைக்காக மருகிடும் மனம்
மனிதருக்கெங்கே புரிந்திடும்?