Friday 27 April 2012

உயிர்

பருவமும் உருவமும் வயதின் வரைவு
இன்பமும் துன்பமும் மனதின் புனைவு
போனதும் வருவதும் நிகழ்வின் நினைவு
இருப்பதும் இறப்பதும் காலத்தின் கனவு 

உறவும் பிரிவும் உணர்வின் பிளவு
பொய்யும் மெய்யும் அறிவின் களவு
பற்றும் துறவும் அனுபவ விளைவு
இவற்றில் இருக்கு உயிர்களின் அழகு.







Wednesday 18 April 2012

விருந்து

ஏதுமற்ற இலையில் நீரெடுத்து தெளிக்கையில்
ஒழுங்கற்று விழுந்திடும் துளிகளாய் காலம்
துளிகளை துடைத்தபின் துப்பரவாய் இருப்பதாக
நினைத்திடும் மனதுக்கு கிடைப்பதே ஞானம்.

வயதுகளின் இலையில் வைக்கப்படும் உணவை,
நிகழ்வுகளின் சுவையில் நிரம்பிடும் உணர்வை,
காலத்தின் விரல்கள் வழித்து உண்ட பிறகு
ஞாபகப்  பருக்கைகளே மீதமுள்ள மனது.

நினைவின் நாக்கு தீண்டும் இலையில்
இனிவரும் பொழுதுகள் இருக்குது உலையில்
காலம் நம்மை சமைக்கும் கலையில்
வாழ்வின் ருசி பசிக்கும் வரையில்.