Thursday 30 August 2012

நேற்றிருந்த மரம்...

நீ நின்ற‌ இடத்தில் நான் இன்று இருக்கையில்
வெயிலில் சுடுகிறது நினைவின் நிழல்;
இயந்திரம் உந்தன் சிறகுகள் முறிக்கையில்,
அடிவரை அறுத்து உன் உயிர் குடிக்கையில்,
வெட்டப்படும் வேர்கள் உதவிக்கு அழைக்கையில்,
முன்னேற்றத்தின் முக்காடுக்குள்
ஒளிந்து கொண்டேன் நான்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
கற்பனை அல்ல கட்டாயம் நிகழும்
மழை மெல்ல மண்ணை விட்டு தூரமாக போகிறது
புத்தி கெட்ட நமக்கு இது புரியவா போகிறது?

Monday 13 August 2012

சுதந்திர கோமாளிகள்


ஆண்டு தோறும் சுதந்திர தினம் வரும்
அனைவருக்கும்  அது விடுமுறை தரும்
சற்று ஓய்வு பெற்றிட உற்சாகமாய் சுற்றிட‌
உபயோகமாய் உள்ளதாய் ஊரெல்லாம் சொல்கிறோம்;

தனிமனித ஒழுக்கமும் தார்மீக நேர்மையும்
தவிட்டுக்கும் உதவாது என்று பார்த்து விட்டோம்;
சமூக அக்கறை கொண்டவர் பெயர்களை
பிழைக்கத் தெரியாதோர் பட்டியலில் சேர்த்து விட்டோம்;

ஒட்டாத உணவுகள் ஒவ்வாத‌ பண்புகள்
மேற்கை பார்த்து மேம்போக்காய் தின்றோம்
முன்னேற்றம் என்ற போர்வைக்குள்ளே
உணர்வுகள் உறவுகள் இரண்டையும் கொன்றோம்.

ஊழலில் திளைப்போர் உயரத்தில் வாழ்வதும்
உண்மை மனங்கள் உருக்குலைந்து வீழ்வதும்
வீட்டிலும் நாட்டிலும் நடக்கின்ற ஒன்று
சுதந்திர நாட்டின் சூத்திரம் நன்று.

வீதியில் விற்கும் தேசிய கொடியை
வாகனத்தில் வாங்கி வைப்பது எதற்கு?
அன்றாட வாழ்வின் ஆயிரம் செயல்களில்
நாட்டைப் பற்றிய நினைப்புண்டோ நமக்கு?
சாக்கடை போல நாறுது நாடு - நமக்கு
சுதந்திர(ம்) தினம் மகிழ்ந்து கூத்தாடு!.