Sunday 14 July 2013

மழைச் செய்தி

வான்நீர் சொரியும் பொழுதில்
தேநீர் அருந்திக் கொண்டே
மழையிலே மனம் லயித்தால்
களைப்பெல்லாம் கரைந்து போகும்

மின்னல் கண்ணைத் தாக்கும் என்று
ஜன்னல் கதவைச் சாத்தாதீர்
தொலைதூரம் பயணம் செய்து
நம்மைப் பார்க்க வரும் மழைக்கு
வழி காட்டி ஒளி ஊட்டும்
விழிகளே மின்னலாகும்

இளையவரோ முதியவரோ
இருபாலர் பிரிவினரோ
இன்றைய வாழ்க்கை முறையில்
இரவிலே உறக்கமில்லை
விளக்குகள் அணைத்து விட்டு
வீதியில் விழும் மழையின்
துளிகளின் இசை ரசித்தால்
துயில் நம்மைத் துரத்தி வரும்