Friday 25 January 2013

மலையேற்றம்

முந்தைய காலம் தொட்டு முகாந்திரம் ஏதுமின்றி
மந்தையாய் ஒரு கூட்டம் மலையேறி மாய்கிறது
அடிவாரத்தில் வசதிகள் அருகாமை என்பதனால்
ஆகாய விசாலம் அறிந்திட அவதானமில்லை;
மெய்யுணர்வின் பாதையொன்றே
மேலேறும் வழி எனவே
பிணைந்திருக்கும் பொருளெதுவும்
பின்தொடர்ந்து வருவதில்லை;
கண்களின் விரிவோ
காட்சியின் செறிவோ
காலத்தின் பரிவோ
காயத்தின் முதிர்வோ
சிலதால்...சிலதாய்...சிகரம்.

Sunday 13 January 2013

பொங்கலுக்கேற்ற அல்வா...


ஆறுகளில் தண்ணியில்லை ஊற்று ஊற மண்ணுமில்லை
பக்கத்தில் உள்ளோருக்கு பகிர்ந்திடும் எண்ணமில்லை
பக்குவமாய் பேசித் தீர்க்க பெரியோர்கள் இங்குமில்லை
பகல்கொள்ளை அடிக்கும் கட்சிகளுக்கு பஞ்சமில்லை
வர்க்கபேதம் வளர்க்கும் வன்முறைகள் கொஞ்சமில்லை
ஒவ்வொரு துறையிலும் நிர்வாக சீர்கேடு
தனிமனித ஒழுக்கமோ படுது பெரும்பாடு
ஒய்யார கொண்டைக்குள் ஒராயிரம் புழுக்கூடு
இப்படித்தான் இருக்குது நம் தமிழ்நாடு
இத்தனை அல்வா நமக்கென இருக்கு
பொங்கலும் கரும்பும் தனியே எதற்கு?