Friday 18 May 2012

முள் வேலி

பற்று வைத்த பலவும் வெற்று என அறிதல்
பெற்றெடுத்த தாயை பெருந் தீக்கிடுதல்
உற்சாகம் தராத வேலையில் உழைத்தல் 
கடந்ததை நினைத்தே காலத்தை கழித்தல்
அடுத்தவர் உணர்வை அடிவேரில் சிதைத்தல்
காலத்தின் வீச்சில் கனவுகள் தொலைத்தல்
அன்பை மிதிக்கும் அவமதிப்பு பொறுத்தல்
பாசாங்கு செய்வோரை பயன்கருதி சேர்(த்)தல்
நம்பிய உறவுகளின் நாடகம் வெளுத்தல்
வயது போனபின் வாழ்க்கை புரிதல்
வயோதிகத்தின் நிழலில் தனிமை சுடுதல்
இறுதிவரை எதிலும் தெளிவின்றி வாழ்தல்
இருப்பதில் விருப்பம் இறக்கையில் மிகுதல்  
இருந்ததன் சுமையுடன் கங்கையில் கரைதல்







Sunday 6 May 2012

தேரோட்டம்

ஆண்டவன் பெயரைச் சொல்லி ஆசை வந்த காரணத்தால்
ஆயிரம் தேரோட்டம் ஆண்டு தோறும் நடக்கிறது
கொண்டாட்டமாய் துவங்கும், குதூகலம் நிறைந்திருக்கும்
தேர் வரும் பாதை எல்லாம் திருவிழா போலிருக்கும்;

வடம்பிடிக்கும் பாவனையில் வருகின்ற  பலபேரில்
ஒருசிலரின் உதவியுடன் உருண்டோடும் உற்சவர் தேர்
திருப்பங்கள் வந்துவிட்டால் திட்டமிடல் அவசியமாம் 
விருப்பத்திற்கு ஏற்றவாறு விவரமின்றி வடம்பிடித்தால்
அனுபவத்தின் முதிர்ச்சியின்றி ஆளுக்கொரு திசையிழுத்தால்
ஆலயத்தேர் என்றாலும் அச்சாணி முறிந்து விடும்;

தெருவிலே நின்ற கூட்டம் தேரடி சேர்வதில்லை
தேரிலே எப்பொழுதும் மூலவர் வருவதில்லை
கடவுள் பவனி வரும் தேரோட்டம் என்பது -
காலம் இழுத்துச் செல்லும் நம் கதையை சொல்வது.