Sunday 27 October 2013

காலத்தின் கணக்கு

நேற்றாலே வாழ்கிறேன்
நேற்றில் நான் வாழ்கிறேன்...
முழுமையற்று கடந்தாலும்
முட்கள் சில இருந்தாலும்
கடந்து வந்தவையாலும்
கழிந்து போனவையாலும்
இன்று மீதேறி நின்று
நேற்றை பார்த்து வாழ்கிறேன்...
நாளை வரும் நாளும் கூட‌
நாளையின் மறு தினத்தில்
நேற்று என்று ஆவதே
நேர விதி ஆனதால்
நேற்றிலேயே வாழ்கிறேன்
நேற்றாகவே ஆகிறேன்...

Sunday 14 July 2013

மழைச் செய்தி

வான்நீர் சொரியும் பொழுதில்
தேநீர் அருந்திக் கொண்டே
மழையிலே மனம் லயித்தால்
களைப்பெல்லாம் கரைந்து போகும்

மின்னல் கண்ணைத் தாக்கும் என்று
ஜன்னல் கதவைச் சாத்தாதீர்
தொலைதூரம் பயணம் செய்து
நம்மைப் பார்க்க வரும் மழைக்கு
வழி காட்டி ஒளி ஊட்டும்
விழிகளே மின்னலாகும்

இளையவரோ முதியவரோ
இருபாலர் பிரிவினரோ
இன்றைய வாழ்க்கை முறையில்
இரவிலே உறக்கமில்லை
விளக்குகள் அணைத்து விட்டு
வீதியில் விழும் மழையின்
துளிகளின் இசை ரசித்தால்
துயில் நம்மைத் துரத்தி வரும்

Sunday 28 April 2013

கடலும் காலமும்...


அழகான அமைதியுடன்
ஆர்ப்பரிக்கும் கடலருகில்
நனையாமல் நிற்பதில்
நமக்கென்ன சுகமென்று
ஆசைகள் கொண்டு
ஆயத்தம் செய்து
அனைவரும் கடல்தரும்
அனுபவம் பெறுவதுண்டு.

அலை சேரும் இடமெல்லாம்
மணல் சேர்தல் சகஜமென்று
விரலிடுக்கில் ஒட்டியதை
வீடுவந்து கழுவினாலும்
நனைந்து காய்ந்த நமக்குள்ளே
எப்போதும் கடலிருக்கும் -
கடல் விரும்பும் நேரத்திலே
அது நம்மை வரவழைக்கும்.

Saturday 23 March 2013

வனப்பிரஸ்தம்...


அறிந்தவைகளில் ஆசை வைத்து
ஆசைகளில் நியாயப்படுத்தி
நியாயங்களை அர்த்தப்படுத்தி
அர்த்தங்களை மகிழ்ச்சியாக்கி
மகிழ்ச்சியை மையமாக்கி
மையத்தை மனதில் வைத்து
வையத்தில் வாழ்வதையே
உய்வதற்கான வழிகள் என்று
நெய்யப்படுகிறது நேர்த்தியின்றி
வாழ்வியல் விதிமுறைகள்;
விதிமுறை பற்றிய கேள்விகளை
மதிமுழுதும் வீசியபடி
முன்னறிவிப்பு ஏதுமின்றி
முன்செல்கிறது காலம்
முதுமையை முகர்ந்தபடி...

Saturday 16 February 2013

இலை மறை காய்...


அசைந்த மரம்
இசைந்த இலை
உதிர்தலில் உள்ளது
உறவும் பிரிவும்.

ஒரு சருகின் இருப்பை
உள்ளடக்கி உருவாவதே
ஓரு விதையின் கோட்பாடு.

பெருவெள்ளம் அடித்துச் செல்லும்
இலையில் தத்தளிப்பது
மரத்தின் நினைவு.

எத்தனை மரங்கள்
எத்தனை இலைகள்
இலைகள் அறியுமா
விதையின் கதை?

Friday 25 January 2013

மலையேற்றம்

முந்தைய காலம் தொட்டு முகாந்திரம் ஏதுமின்றி
மந்தையாய் ஒரு கூட்டம் மலையேறி மாய்கிறது
அடிவாரத்தில் வசதிகள் அருகாமை என்பதனால்
ஆகாய விசாலம் அறிந்திட அவதானமில்லை;
மெய்யுணர்வின் பாதையொன்றே
மேலேறும் வழி எனவே
பிணைந்திருக்கும் பொருளெதுவும்
பின்தொடர்ந்து வருவதில்லை;
கண்களின் விரிவோ
காட்சியின் செறிவோ
காலத்தின் பரிவோ
காயத்தின் முதிர்வோ
சிலதால்...சிலதாய்...சிகரம்.

Sunday 13 January 2013

பொங்கலுக்கேற்ற அல்வா...


ஆறுகளில் தண்ணியில்லை ஊற்று ஊற மண்ணுமில்லை
பக்கத்தில் உள்ளோருக்கு பகிர்ந்திடும் எண்ணமில்லை
பக்குவமாய் பேசித் தீர்க்க பெரியோர்கள் இங்குமில்லை
பகல்கொள்ளை அடிக்கும் கட்சிகளுக்கு பஞ்சமில்லை
வர்க்கபேதம் வளர்க்கும் வன்முறைகள் கொஞ்சமில்லை
ஒவ்வொரு துறையிலும் நிர்வாக சீர்கேடு
தனிமனித ஒழுக்கமோ படுது பெரும்பாடு
ஒய்யார கொண்டைக்குள் ஒராயிரம் புழுக்கூடு
இப்படித்தான் இருக்குது நம் தமிழ்நாடு
இத்தனை அல்வா நமக்கென இருக்கு
பொங்கலும் கரும்பும் தனியே எதற்கு?