Saturday 22 December 2012

கால ஞானம்


இன்று என்பது நாளையின் நேற்று
இவற்றின் தொகுப்பே காலத்தின் ஊற்று
இடையே இயங்குது நம் மூச்சுக் காற்று
இப்பொழுதும் எப்பொழுதும் இதற்கில்லை மாற்று;

ஒவ்வொரு நொடியையும் அதன்வழி பார்த்து
வருகின்ற அனுபவம் வயதுடன் சேர்த்து
கடக்கின்ற அனைத்தையும் காலத்தில் கோர்த்து
காலத்தின் வழியே கடவுளை நோக்கு.

Sunday 2 December 2012

மழை நோய் மருத்துவம்...


உச்சரித்து உச்சரித்து உதடுகளில் ஊற வைத்து
நாவினிலே நனைத்தெடுத்து நரம்புகளுக்கு அனுப்பி வைத்து
உதிரத்தில் கரைந்து உயிருக்குள் பரவும்
மழையை சாப்பிட்டால் மனம் பெறும் தித்திப்பால்
ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுமா என்று
மருத்தவரிடம் கேட்டேன் மழையின் ருசியை...
மனநோயா உனக்கென மருத்துவர் கேட்டார்
மழை நோய் எனக்கென மறுமொழி சொன்னேன்.

பசி மிக அதிகம் எடுக்கிறது
பகலிலும் சோர்வு கொடுக்கிறது
வியர்வை அதிகம் வழிகிறது
வீணாய் கோபம் வருகிறது
உழைப்பின் வேகம் குறைகிறது
உணர்வும் களைப்பு பெறுகிறது
மழை பெய்ய மறுக்கும் பொழுதுகளில்
மனம் மிக அடையும் பழுதுகளால்
சர்க்கரை நோயின் அறிகுறிகள்
சாத்தியம் என்று நினைப்பதனால்
சந்தேகம் வந்தது என்று சொன்னேன்
சங்கடத்தில் அவர் நெளிந்தார்...

மாத்திரை ஏதும் இல்லையென்றும் - மழை
யாத்திரை போவதே நல்லதென்றும் - தினம்
மழைக்காக மருகிடும் மனம்
மனிதருக்கெங்கே புரிந்திடும்?

Sunday 18 November 2012

புத்தகம் படிப்பது எப்படி?


காகித வாசனை நேசி
கருத்தை நன்றாய் வாசி
பிடித்தமோ இல்லையோ யோசி
நல்லதை மனதுடன் பேசி
அல்லதை குப்பையில் வீசி
வடிகட்டி வாழ்க்கையில் பூசி
கழுவலாம் ஜென்மத்து பாசி
புத்தகம் நெஞ்சுக்கு ஊசி
பிறகெதற்கு போகணும் காசி?


Saturday 3 November 2012

மழை பெய்த இரவு...


அன்பு என்ற ஒன்றை மட்டும்
அகிலம் முழுதும் அளிக்கும் மழை
அனைவரின் வீட்டிற்குள்ளும்
அவ்வப்பொழுது வர முயலும்;

விருந்தாளியை உபசரிக்க‌
விரும்பாத நம் குணத்தால்
கதவடைத்து வைத்தாலும்
கனிவுடன் காத்து நிற்கும்
அழகான குரலாலே
அனுமதி கேட்டு நிற்கும்;

மறுக்கின்ற பொழுதெல்லாம்
மனமுடைந்து மண்ணில் சாயும்
உறவாட வந்த மழை
இரவெல்லாம் அழுதபடி
சாலையில் தேங்கி நிற்கும்
காலையேனும் நம்மை பார்க்க...

Saturday 20 October 2012

வாழ்க்கையின் சாலை...

ஆங்காங்கே தென்படும் மகிழ்ச்சி
அதனிடை துன்பத்தின் அதிர்ச்சி
இரண்டையும் பழகிட பயிற்சி
இடையிலே பரவிடும் அயற்சி
இவற்றினைப் படிப்பதே வளர்ச்சி
மனதுக்குள் பக்குவ மலர்ச்சி
அனைத்திலும் அனுபவ திரட்சி
இதுவே வாழ்க்கையின் கவர்ச்சி
இறுதியில் வருவது முதிர்ச்சி
புரிந்திடும் காலத்தின் சுழற்சி.


Saturday 6 October 2012

மழையோடு மழையாகி...


நம் நினைவு புத்தகத்தை
தன் நெடிய கரங்களினால்
வருடிப் பார்க்கும் வானத்திற்கு
வசதியான விரல்கள் மழை.

வானம் தெளிக்கும் நீரை எடுத்து
தேகம் முழுக்கத் தேடிப் பிடித்து
என்றோ சேர்த்த ஏதோ நினைவை
எப்படி எடுக்கிறது மழை?

நேரம் சற்று மறந்து
சாரல் மழையில் நடந்து
தேகம் நனைக்கத் தெரிந்து
பாரம் இறக்கப் பழகு.

மழையை ரசிக்கும்
மருத்துவம் படித்தால்
மனதின் நோய்கள்
மழையால் நீங்கும்.

Thursday 20 September 2012

கடைசி குருவி...


நம் வீட்டில் தன் கூட்டை நாமறியாது கட்டி
அன்றாடம் நம்மோடு தன் வாழ்வை ஒட்டி
வருடக்கணக்கில் வசித்த‌ நம்மூர் குருவி
எப்படித்தான் போனது எங்கேயோ விலகி?

ந‌ம் வீட்டு முற்றத்தில் எஞ்சிய பருக்கைகளை
நன்கறிந்து பறந்து வந்து கொஞ்சிக் குறுமொழியில்
கொத்திச் செல்லும் குருவியை வஞ்சித்த‌ பாவமெல்லாம்
நம்மையே சேரும் வருங்காலம் தோறும்...

அறைக்குள் பறக்குமென்று மின்விசிறி நிறுத்தி
கதவிடையே இருந்தால் கண்களை உறுத்தி
அடிபட்டால் அதன் மேல் அன்பினை காட்டி
தேங்காய் ஒட்டில் நீர்வைத்து ஊட்டி
பறவையிடம் கூட பழகினோம் அன்று
சுயநலம் பிடித்து அழுகினோம் இன்று

அலைபேசி கோபுரங்கள் அதிகளவில் நிறுவி
ஆளுக்கொரு கத்தியை அதன் முதுகில் சொருகி
கொலை செய்த நமது ஊரை விட்டு விலகி
"மதியாதார் தலைவாசல்" அர்த்தத்தை பருகி
மறைந்தே போனது மானமுள்ள குருவி!

Friday 14 September 2012

நம் வீட்டின் வரைபடம்...


சாம்ராஜ்ஜிய மன்னரோ சாதாரண மனிதரோ
இருந்த கால நினைவுகளே இருவரின் சரித்திரமாம்
நம் நினைவை நட்டுச் செல்ல‌
பிறர் நினைவை தொட்டுக் கொள்ள‌
நாலு சுவர் நடுவினிலே
கட்டி வைத்த அறைகளிலே
காற்றினிலே கலந்திருக்கும்
காலத்தின் நாட்குறிப்பு.

வாடகை வீட்டில் வசிப்போர்க்கும்
வசித்த வீட்டை விற்போர்க்கும்
வரைபடம் வைத்துக் கொள்ள‌
வசதியான வழிகள் உண்டு
இதுவரை இருந்த வீட்டில்
இயல்பாகச் சேர்த்த நினைவை
அளவாக மனதில் அள்ளி
செல்லும் இடம் சேர்த்திடுவீர்

சொந்த வீடு வைத்திருப்போர்
சந்தை லாபம் பாராமல்
சற்று நேரம் யோசித்தால்
விற்கும் விருப்பம் விலகிவிடும்
மூதாதையர் வாழ்ந்த வீட்டை
முடிந்தவரை விற்காதீர்
திதி செய்தால் தீர்ந்ததென்று
திருப்தி என்றும் கொள்ளாதீர்

ஆண்டு பல கடந்தாலும்
மீண்டு வர இயலாத‌
நீண்ட ஒரு நித்திரையில்
மாண்ட பல மனிதர்கள்
வாழ்ந்து சென்ற வீடுகளில்
காலம் வேய்ந்த கூடுகளில்
அன்று தந்த ஞாபகங்கள்
இன்றும் வந்து குடியிருக்கும்.

Thursday 30 August 2012

நேற்றிருந்த மரம்...

நீ நின்ற‌ இடத்தில் நான் இன்று இருக்கையில்
வெயிலில் சுடுகிறது நினைவின் நிழல்;
இயந்திரம் உந்தன் சிறகுகள் முறிக்கையில்,
அடிவரை அறுத்து உன் உயிர் குடிக்கையில்,
வெட்டப்படும் வேர்கள் உதவிக்கு அழைக்கையில்,
முன்னேற்றத்தின் முக்காடுக்குள்
ஒளிந்து கொண்டேன் நான்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
கற்பனை அல்ல கட்டாயம் நிகழும்
மழை மெல்ல மண்ணை விட்டு தூரமாக போகிறது
புத்தி கெட்ட நமக்கு இது புரியவா போகிறது?

Monday 13 August 2012

சுதந்திர கோமாளிகள்


ஆண்டு தோறும் சுதந்திர தினம் வரும்
அனைவருக்கும்  அது விடுமுறை தரும்
சற்று ஓய்வு பெற்றிட உற்சாகமாய் சுற்றிட‌
உபயோகமாய் உள்ளதாய் ஊரெல்லாம் சொல்கிறோம்;

தனிமனித ஒழுக்கமும் தார்மீக நேர்மையும்
தவிட்டுக்கும் உதவாது என்று பார்த்து விட்டோம்;
சமூக அக்கறை கொண்டவர் பெயர்களை
பிழைக்கத் தெரியாதோர் பட்டியலில் சேர்த்து விட்டோம்;

ஒட்டாத உணவுகள் ஒவ்வாத‌ பண்புகள்
மேற்கை பார்த்து மேம்போக்காய் தின்றோம்
முன்னேற்றம் என்ற போர்வைக்குள்ளே
உணர்வுகள் உறவுகள் இரண்டையும் கொன்றோம்.

ஊழலில் திளைப்போர் உயரத்தில் வாழ்வதும்
உண்மை மனங்கள் உருக்குலைந்து வீழ்வதும்
வீட்டிலும் நாட்டிலும் நடக்கின்ற ஒன்று
சுதந்திர நாட்டின் சூத்திரம் நன்று.

வீதியில் விற்கும் தேசிய கொடியை
வாகனத்தில் வாங்கி வைப்பது எதற்கு?
அன்றாட வாழ்வின் ஆயிரம் செயல்களில்
நாட்டைப் பற்றிய நினைப்புண்டோ நமக்கு?
சாக்கடை போல நாறுது நாடு - நமக்கு
சுதந்திர(ம்) தினம் மகிழ்ந்து கூத்தாடு!.


Tuesday 24 July 2012

காடு - ஒரு அறிமுகம்


காட்டின் விடியல் காண்கின்ற விழியும்
மனதுக்குள்ளே அது பாய்ச்சும் ஒளியும்
பறவைகள் தமக்குள் பேசுகின்ற மொழியும்
காலாற நடக்கையில் காற்று வீசும் ஒலியும்
கடக்கின்ற ஒவ்வொரு நிமிடத்தின் துளியும்
மகிழ்ச்சியின் சாறாய் நம்மீது வழியும்.

புற்களின் அசைவிலும் உற்சாகம் இருக்கும்
சொற்களை மீறிய அர்த்தங்கள் கொடுக்கும்
வனத்தின் வசீகரம் நம் வயதை குறைக்கும்
சுத்தமான காற்று நுரையீரல் நிறைக்கும்
நகரத்து வாழ்வின் அச்சாணி முறியும்
இயற்கை என்பதன் உச்சாணி புரியும்

Sunday 1 July 2012

ஒரு சொல்

பல காலம் சொல்லிப் பழகிய சொல்லின்
வாழ்வாலும் வயதாலும் பதிவாகும் ஒன்றின்
உச்ச‌ரிப்பின் உயிர் போன சடலமாக‌
உயிர் தந்த சொல்லின் உருவ‌ம் மாற‌
சொல்லின் எழுத்துக்களை சுடுகாட்டில் குவித்து
அதனோடு அச்சொல்லின் அர்த்தங்களை அவித்து
பொருளின் வடிவத்தை சிதையிலே தள்ளி
நாக்கினால் சொல்லுக்கு வைத்தாயிற்று கொள்ளி
வேகாத‌ சொல்லை சாம்ப‌லாய் அள்ளி
நினைவின் கோலத்தில் நிரந்தரப் புள்ளி.

Wednesday 13 June 2012

மழை விழும் பொழுது...

வீதியெங்கும் விரல் பதித்து
வட்ட வட்ட புள்ளி வைத்து
நீர்க் கோலம் போட்டபடி
ஊர் சுற்றும் மழை.

மேகங்களில் உறங்கி
வானத்தில் இறங்கி
கார் காலத் தேர் ஏறி
ஊர் வந்து சேர் மழை.

உடை நனையும் என்று நினைத்து
குடை விரித்து நாம் பிடித்தால்
மழைக்கு வருத்தம் வரும்
மண் மேல் புரண்டு அழும்.

மாபெரும் ம‌ழையின்
ஓரிரு துளிகள்
கையில் ஏந்திப் பார்
க‌ளிப்பில் நீந்திப் பார்.

Saturday 2 June 2012

கடலின் காலடியில்...

தொடுவானில் சூரியன் கடலில் விழும் மாலை
காய்ச்சிய இரும்பாய் கடல் சிவக்கும் வேளை
பார்க்கின்ற அனைவருக்கும் காலத்தின் ஓலை
வாசிக்கத் தருவதே கடலுக்கு வேலை.


நினைவின் குமிழே நுரையாகும்
நினைக்க நினைக்க அலையாகும்
வருவதும் போவதும் கரையாகும்
வாழ்க்கை வடிவம் கடலாகும்.


கரையில் இருக்கும் கண்களுக்கு
மனதில் வலிக்கும் புண்களுக்கு
எளிதில் அமைதி ஏற்படுத்தும்
அலையின் மருந்து அற்புதமே!

தொட்டுப் போன‌ அலை - ந‌ம்மேல்
ஒட்டி வைக்கும் மணல் - அதில்
எட்டிப் பார்க்கும் கால‌ம் - கை
த‌ட்டிச் சிரிக்கும் க‌ட‌ல்.

Friday 18 May 2012

முள் வேலி

பற்று வைத்த பலவும் வெற்று என அறிதல்
பெற்றெடுத்த தாயை பெருந் தீக்கிடுதல்
உற்சாகம் தராத வேலையில் உழைத்தல் 
கடந்ததை நினைத்தே காலத்தை கழித்தல்
அடுத்தவர் உணர்வை அடிவேரில் சிதைத்தல்
காலத்தின் வீச்சில் கனவுகள் தொலைத்தல்
அன்பை மிதிக்கும் அவமதிப்பு பொறுத்தல்
பாசாங்கு செய்வோரை பயன்கருதி சேர்(த்)தல்
நம்பிய உறவுகளின் நாடகம் வெளுத்தல்
வயது போனபின் வாழ்க்கை புரிதல்
வயோதிகத்தின் நிழலில் தனிமை சுடுதல்
இறுதிவரை எதிலும் தெளிவின்றி வாழ்தல்
இருப்பதில் விருப்பம் இறக்கையில் மிகுதல்  
இருந்ததன் சுமையுடன் கங்கையில் கரைதல்







Sunday 6 May 2012

தேரோட்டம்

ஆண்டவன் பெயரைச் சொல்லி ஆசை வந்த காரணத்தால்
ஆயிரம் தேரோட்டம் ஆண்டு தோறும் நடக்கிறது
கொண்டாட்டமாய் துவங்கும், குதூகலம் நிறைந்திருக்கும்
தேர் வரும் பாதை எல்லாம் திருவிழா போலிருக்கும்;

வடம்பிடிக்கும் பாவனையில் வருகின்ற  பலபேரில்
ஒருசிலரின் உதவியுடன் உருண்டோடும் உற்சவர் தேர்
திருப்பங்கள் வந்துவிட்டால் திட்டமிடல் அவசியமாம் 
விருப்பத்திற்கு ஏற்றவாறு விவரமின்றி வடம்பிடித்தால்
அனுபவத்தின் முதிர்ச்சியின்றி ஆளுக்கொரு திசையிழுத்தால்
ஆலயத்தேர் என்றாலும் அச்சாணி முறிந்து விடும்;

தெருவிலே நின்ற கூட்டம் தேரடி சேர்வதில்லை
தேரிலே எப்பொழுதும் மூலவர் வருவதில்லை
கடவுள் பவனி வரும் தேரோட்டம் என்பது -
காலம் இழுத்துச் செல்லும் நம் கதையை சொல்வது.


Friday 27 April 2012

உயிர்

பருவமும் உருவமும் வயதின் வரைவு
இன்பமும் துன்பமும் மனதின் புனைவு
போனதும் வருவதும் நிகழ்வின் நினைவு
இருப்பதும் இறப்பதும் காலத்தின் கனவு 

உறவும் பிரிவும் உணர்வின் பிளவு
பொய்யும் மெய்யும் அறிவின் களவு
பற்றும் துறவும் அனுபவ விளைவு
இவற்றில் இருக்கு உயிர்களின் அழகு.







Wednesday 18 April 2012

விருந்து

ஏதுமற்ற இலையில் நீரெடுத்து தெளிக்கையில்
ஒழுங்கற்று விழுந்திடும் துளிகளாய் காலம்
துளிகளை துடைத்தபின் துப்பரவாய் இருப்பதாக
நினைத்திடும் மனதுக்கு கிடைப்பதே ஞானம்.

வயதுகளின் இலையில் வைக்கப்படும் உணவை,
நிகழ்வுகளின் சுவையில் நிரம்பிடும் உணர்வை,
காலத்தின் விரல்கள் வழித்து உண்ட பிறகு
ஞாபகப்  பருக்கைகளே மீதமுள்ள மனது.

நினைவின் நாக்கு தீண்டும் இலையில்
இனிவரும் பொழுதுகள் இருக்குது உலையில்
காலம் நம்மை சமைக்கும் கலையில்
வாழ்வின் ருசி பசிக்கும் வரையில்.


  

Friday 30 March 2012

சிகை திருத்தகத்தில் ஒரு நாள்...

நெடுந்தூக்கம் கலைந்திட்ட ஞாயிறு காலை
கண்ணாடியின் முன்னின்று பார்த்திட்ட வேளை
நாளை என்று நாட்கள் தள்ளி வளர்ந்திட்ட முடிகள்
முகம் மறைக்க முன்னே வந்து விழுந்திட்ட நொடிகள்
இன்றேனும் என்றெண்ணி சில நிமிட நடையில்
நானும் அமர்ந்திருந்தேன் முடிவெட்டும் கடையில்.

கடவுள் படம் கவர்ச்சி படம் இரண்டும் இருக்க
கள்ளம் கண்ணில் இருந்த சிலர் நடிகையை பொறுக்க
வயதில் தளர்ந்த முதியவர்கள் அமைதியாய் இருக்க
காற்று வரா மின்விசிறி சத்தங்கள் கொடுக்க
நாளிதழ் ஒன்றை பகிர்ந்து நால்வர் படிக்க
அவற்றில் உள்ள செய்திகளின் விமர்சனம் நடக்க
அவரவர் வாழ்க்கை முறை அதன்வழி கடக்க
அரசியலும் ஆன்மீகமும் அறையினில் தெளிக்க
கேட்டும் கேட்க்காதது போல் நானும் களிக்க
கடைக்காரர் அழைத்தார் என்னை மழிக்க.

சலவை செய்த வேட்டியினை சட்டென்று போர்த்தி
பழைய பாட்டில் தண்ணீரை சாரலாய் ஊற்றி
நன்றாய் தலையினில் ஈரத்தை ஏற்றி
கத்திரியும் சீப்பும் கைகளில் மாற்றி
நம்சிகை அழகு செய்யும் நாவிதர் போற்றி.

சீப்பின் ஊடுருவல் சிலிர்ப்பினை ஊட்ட
காதருகில் கத்திரி கூச்சம் காட்ட
இரண்டின் சுகத்தில் இமைகள் மூட
விழித்து நம்முகத்தை நாமே தேட
இறுதி கட்ட நடவடிக்கை இதிலும் உண்டு
இங்கங்கு அசையாமல் இருத்தல் நன்று.

நாடுகளுக்கிடையில் உள்ள பிரிவினை போல
பின்தலையின் எல்லையிலும் சிக்கல்கள் உண்டு
அவரவரின் விருப்பதிற்கேற்ப அளவை வைத்து
நேர்கோட்டில் நேர்த்தியாய் வடிவம் வெட்ட
கத்திரி உதவாது கத்தியே வேண்டும்.

பின்னாடி கண்ணாடி பிடித்தபடி நின்று
தன்வேலை நன்றாக இருக்கிறதா என்று
கேட்கின்ற அவரிடத்தில் புன்னகை காட்டி
போதும் என்ற அர்த்தத்தில் தலையை ஆட்டி
அதற்குரிய பணத்தை அவரிடம் நீட்டி
வீடுவந்து குளித்து உண்ட பின்வரும் தூக்கம்
அரசனுக்கும் ஆண்டிக்கும் பொதுவான சொர்க்கம்.















Wednesday 7 March 2012

காலம்

பொருந்தாத நிகழ்வுகளில் சிக்க வைக்கும்
வருத்தங்களில் மனதை விக்க வைக்கும்
விரும்பிய உணர்வுகளை விற்க வைக்கும்
திருத்தங்கள் செய்து கற்க வைக்கும்
விழுந்தாலும் மறுபடி நிற்க வைக்கும்
நமக்குள் நம்பிக்கை தக்க வைக்கும்


செய்பவை சரியென்று சொல்ல வைக்கும்
செய்தபின் அவற்றினுள் முள்ளை வைக்கும்
ரணங்கள் உண்டாக்கி  ஆற வைக்கும்
குணங்களில் குறுக்கிட்டு மாற வைக்கும்
உடனிருந்தே சமயங்களில் கவிழ வைக்கும்
முதிர்ச்சியின் மொட்டுக்கள் அவிழ வைக்கும்


இல்லாதவற்றின் பின் ஓட வைக்கும்
இருப்பின் பொருளை தேட வைக்கும்
இவற்றின் நடுவே வாழ வைக்கும்
இறுதியில் நம்மை மாள வைக்கும்
காலம் மீதொரு காதல் எனக்கு
கசப்பும் இனிப்பும் நாவில் இருக்கு.


  

Friday 24 February 2012

கடிதங்கள்...

மனதிற்குள் கையை விட்டு நாம் எடுத்த உணர்வுகளை
மையை ஊற்றி மசிய வைத்து பிரதி எடுக்கும் வடிவங்களை
வார்த்தைகளில் படிய வைத்து தாள்களிலே தங்க வைக்கும்
கடிதங்கள் நமக்கு  காலத்தின் உயில்கள்;

அஞ்சல்காரர் வருகை எதிர்பார்த்த தினங்கள்
பிடித்தவரின் கடிதம் பிரித்திட்ட கனங்கள்
இருகடித இடைவெளியில் உருண்டோடும் நாட்களில் -
காத்திருப்பின் வாசனையில் பூத்திருக்கும் யோசனைகள்
அன்பிற்கு உரமாக அடிமனதில் இறங்கி விடும்
காலத்தை கூட்டி வந்து காகிதத்தில் பூட்டி வைக்கும்
அற்புத குணம் அத்தகைய கடிதம் தரும்;

கடிதங்களின் கடிவாளம் காலத்தை பிடித்திழுக்க
எழுத்தின் மீதேறி எண்ணத்தில் அமர்ந்தபடி
ஞாபக குதிரையின் நாலுகால் பாய்ச்சலிலே
நினைவுச் சாலையிலே நீண்ட தூரம் போய்வரலாம்;

விஞ்ஞான வளர்ச்சிக்கு நாம் கொடுத்த விலையோ-
பணத்தின்பின்  அனைவரும் பறக்கின்ற நிலையோ-
அன்புப் பயிரில் அவசர களையோ-
அற்புதமான எதையும் அவமதிக்கும் கலியோ-
மின்னஞ்சல் நன்று என்றோம் குறுஞ்செய்தி கொண்டு வந்தோம்
கடிதம் எழுதும் கலையை கையாலே கொன்று போட்டோம்.

இனிமேல் வாராது கடிதமெழுதும் காலங்கள்
இருக்கின்றவற்றையேனும் பாதுகாப்போம் வாருங்கள்
அன்பின் பசை அதிலிருக்கும் தேடுங்கள்
ஆண்டுக்கொரு முறை அதை படித்து பாருங்கள்
அடுத்த தலைமுறைக்கு சொத்தாக தாருங்கள்.

Thursday 9 February 2012

பிறப்பு

ஊசிமுனையிலும் சிறுத்த உயிரணுவில்
வீசி எறியப்பட்ட வினையின் விதையுள்  
நாசியில்  காற்று பெற்று உலவும் நாமும்
நேசிக்க நேர்கின்ற உறவை உணர்வை
பூசித்து சேகரிக்கும் பொருளை பணத்தை
வாசித்துப்   பார்க்கின்ற நேரம் வந்தால் - அது
யோசிக்கத் தூண்டும் ஞானம் தந்தால்
காசிக்குப்  போய்வரத்  தேவை இல்லை
காலநதி மட்டுமே இங்கே கங்கை.



Thursday 19 January 2012

வயதின் சுவை...

நாற்பது அருகில் வந்தாச்சு நல்லது கெட்டது  புரிஞ்சாச்சு
உலகின் நிறங்கள் தெளிவாச்சு உறவும் பிரிவும் இயல்பாச்சு
தாயைத் தீயில் இட்டாச்சு தவிப்பு நிறைய பட்டாச்சு
வலிகளில் வலிமை சேர்த்தாச்சு வழிபோக்கர்கள் பார்த்தாச்சு
தாரம் தாய்போல் ஆயாச்சு பாரம் பகிரும் தோளாச்சு
ஒவ்வொரு நாளும் பிறப்பாச்சு செயல்கள் மேலும் சிறப்பாச்சு
அன்பு இன்னும் அழகாச்சு அறிவின் தேடல் விரிவாச்சு
பார்வைகள் பலவும் புதுசாச்சு பழையவை அவற்றின் விழுதாச்சு
மனதை நன்றாய் உழுதாச்சு மலர்கள் மட்டும் பயிராச்சு
நடுத்தர வயதின் முழுவீச்சு நாற்பதில் தெரியும் எனப்பேச்சு
காலம் ஊன்றுகோல் போலானால் கவலைகள் எல்லாம் கால்தூசு.







Monday 9 January 2012

புகார்*

நதியில் குளித்தால் நம் கர்மம் கழியுமென்று
முழுதாய் முங்குதல் அவ்வளவு எளிதன்று;
ஆழம் பார்க்கும் நோக்கில்  வைத்தேன் கால்கள்
அழுக்கெடுக்கும் போக்கில்  கடித்தன மீன்கள்
உதறவும் மனமின்றி ஊன்றிடும் குணமின்றி
அரைகுறையாய் போடுகிறேன் நீரில் முழுக்கு
ஆங்காங்கே கரைகிறது ஆயுள் அழுக்கு
நதியில் முகத்துவாரத்தில் நகைக்கிறது காலம்
நம்பித் தொடர்கிறேன் நானும் அதை நாளும்...


*ஆறு கடலில் கலக்குமிடம்.