Thursday 25 August 2011

ஊவா முள்

புத்தனாக விரும்பி புறப்படும் பல பேரும்
போதாத காலம் வந்தால் தோதான காரணத்தால்
சித்த நேரம் சேற்றில் இறங்கி  சிலுவை சுமந்திடுவர்.
மொத்தமாக கொடுப்பதே சுத்தமாக இருப்பதெனும்
ஒத்துவரா கொள்கையுடன் சுத்தி வரும் மனங்களுக்கு
எல்லாவித உறவிலும் ஏதேனும் ஏமாற்றம்
பிரிந்தாலும் சேர்ந்தாலும் பின்குறிப்பில் முகம் காட்டும்.
சந்தனத்தை அரைத்து சாக்கடையில் கரைத்து
மாற்றம் என்று நுகர்வதும் நாற்றம் என்று நகர்வதும்
நமக்கு ஒன்றும் புதிதில்லை
நாலில்* இரண்டு** பழுதில்லை!

* அறம், பொருள், இன்பம், வீடு
** அவரவர் வாழ்க்கை பொறுத்து...


Friday 12 August 2011

காதல்

நகரத்து நச்சு நான் இயற்கையின் அச்சு நீ
இருவருக்கும் இடையில் இப்படி ஒரு உறவு
வருடத்திற்கு சில முறையோ அடுத்தடுத்த விடுமுறையோ
உனைப் பார்க்க எனக்கு இவை மட்டுமே கணக்கு
பழகிப்போன சாலைகளில் பரபரக்கும் வேளைகளில்
ஓரம் நிற்கும் மரங்களில் ஒளிந்திருக்கும் உன் முகம்


கோடை வாடை குளிர் மழையென
பருவத்தின் பாவனையில் பவனி வந்து
ஆண்டு முழுதும் நாளும் பொழுதும்
உனது நினைவை ஊட்டுகிறாய் நீ
உன்னுடன் இருக்கையில் நான் பெறும் அமைதி
உன்னுள்ளே நடக்கையில் நீ தரும் நிம்மதி
பெரியோர் இதைத்தான் பேரின்பம் என்றனரோ?

நமக்கென வைத்திருக்கும் பிரத்யேக பாதையில்
பேச்சின்றி பிரயாணம் போவதே
நீ எனக்கு அளித்த வரம் - இவை நம் உறவின் பலம்
பைத்திய காதல் என்று பார்ப்போர் சொன்னாலும்
தைத்ரிய நுட்பத்தில் தழைத்தோங்கும் நெறிமுறையில்
வனம் மேல் வாய்த்த காதல் வயதுடன் வளர்கிறது
மரபு சார உணர்வு இது மௌனமாய் தொடர்கிறது...