Monday 13 August 2012

சுதந்திர கோமாளிகள்


ஆண்டு தோறும் சுதந்திர தினம் வரும்
அனைவருக்கும்  அது விடுமுறை தரும்
சற்று ஓய்வு பெற்றிட உற்சாகமாய் சுற்றிட‌
உபயோகமாய் உள்ளதாய் ஊரெல்லாம் சொல்கிறோம்;

தனிமனித ஒழுக்கமும் தார்மீக நேர்மையும்
தவிட்டுக்கும் உதவாது என்று பார்த்து விட்டோம்;
சமூக அக்கறை கொண்டவர் பெயர்களை
பிழைக்கத் தெரியாதோர் பட்டியலில் சேர்த்து விட்டோம்;

ஒட்டாத உணவுகள் ஒவ்வாத‌ பண்புகள்
மேற்கை பார்த்து மேம்போக்காய் தின்றோம்
முன்னேற்றம் என்ற போர்வைக்குள்ளே
உணர்வுகள் உறவுகள் இரண்டையும் கொன்றோம்.

ஊழலில் திளைப்போர் உயரத்தில் வாழ்வதும்
உண்மை மனங்கள் உருக்குலைந்து வீழ்வதும்
வீட்டிலும் நாட்டிலும் நடக்கின்ற ஒன்று
சுதந்திர நாட்டின் சூத்திரம் நன்று.

வீதியில் விற்கும் தேசிய கொடியை
வாகனத்தில் வாங்கி வைப்பது எதற்கு?
அன்றாட வாழ்வின் ஆயிரம் செயல்களில்
நாட்டைப் பற்றிய நினைப்புண்டோ நமக்கு?
சாக்கடை போல நாறுது நாடு - நமக்கு
சுதந்திர(ம்) தினம் மகிழ்ந்து கூத்தாடு!.


2 comments:

  1. இதையும் சேர்த்துக் கொள்ளலாம் :

    யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன...?
    தொலைக்காட்சி முன் தவம் கிடப்போம்...

    அன்று முழுவதும் மின்சாரம் இருந்தால்...
    சுதந்திர தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்...


    நன்றி...

    ReplyDelete
  2. சவுக்கடி

    ReplyDelete