Friday 30 March 2012

சிகை திருத்தகத்தில் ஒரு நாள்...

நெடுந்தூக்கம் கலைந்திட்ட ஞாயிறு காலை
கண்ணாடியின் முன்னின்று பார்த்திட்ட வேளை
நாளை என்று நாட்கள் தள்ளி வளர்ந்திட்ட முடிகள்
முகம் மறைக்க முன்னே வந்து விழுந்திட்ட நொடிகள்
இன்றேனும் என்றெண்ணி சில நிமிட நடையில்
நானும் அமர்ந்திருந்தேன் முடிவெட்டும் கடையில்.

கடவுள் படம் கவர்ச்சி படம் இரண்டும் இருக்க
கள்ளம் கண்ணில் இருந்த சிலர் நடிகையை பொறுக்க
வயதில் தளர்ந்த முதியவர்கள் அமைதியாய் இருக்க
காற்று வரா மின்விசிறி சத்தங்கள் கொடுக்க
நாளிதழ் ஒன்றை பகிர்ந்து நால்வர் படிக்க
அவற்றில் உள்ள செய்திகளின் விமர்சனம் நடக்க
அவரவர் வாழ்க்கை முறை அதன்வழி கடக்க
அரசியலும் ஆன்மீகமும் அறையினில் தெளிக்க
கேட்டும் கேட்க்காதது போல் நானும் களிக்க
கடைக்காரர் அழைத்தார் என்னை மழிக்க.

சலவை செய்த வேட்டியினை சட்டென்று போர்த்தி
பழைய பாட்டில் தண்ணீரை சாரலாய் ஊற்றி
நன்றாய் தலையினில் ஈரத்தை ஏற்றி
கத்திரியும் சீப்பும் கைகளில் மாற்றி
நம்சிகை அழகு செய்யும் நாவிதர் போற்றி.

சீப்பின் ஊடுருவல் சிலிர்ப்பினை ஊட்ட
காதருகில் கத்திரி கூச்சம் காட்ட
இரண்டின் சுகத்தில் இமைகள் மூட
விழித்து நம்முகத்தை நாமே தேட
இறுதி கட்ட நடவடிக்கை இதிலும் உண்டு
இங்கங்கு அசையாமல் இருத்தல் நன்று.

நாடுகளுக்கிடையில் உள்ள பிரிவினை போல
பின்தலையின் எல்லையிலும் சிக்கல்கள் உண்டு
அவரவரின் விருப்பதிற்கேற்ப அளவை வைத்து
நேர்கோட்டில் நேர்த்தியாய் வடிவம் வெட்ட
கத்திரி உதவாது கத்தியே வேண்டும்.

பின்னாடி கண்ணாடி பிடித்தபடி நின்று
தன்வேலை நன்றாக இருக்கிறதா என்று
கேட்கின்ற அவரிடத்தில் புன்னகை காட்டி
போதும் என்ற அர்த்தத்தில் தலையை ஆட்டி
அதற்குரிய பணத்தை அவரிடம் நீட்டி
வீடுவந்து குளித்து உண்ட பின்வரும் தூக்கம்
அரசனுக்கும் ஆண்டிக்கும் பொதுவான சொர்க்கம்.















5 comments:

  1. கத்திரியும் சீப்பும் கைகளில் மாற்றி
    நம்சிகை அழகு செய்யும் நாவிதர் போற்றி.

    சீப்பின் ஊடுருவல் சிலிர்ப்பினை ஊட்ட
    காதருகில் கத்திரி கூச்சம் காட்ட
    இரண்டின் சுகத்தில் இமைகள் மூட
    விழித்து நம்முகத்தை நாமே தேட
    இறுதி கட்ட நடவடிக்கை இதிலும் உண்டு//

    பாடுபொருளும் பாடிய‌வித‌மும் அழ‌கு!

    ReplyDelete
  2. Superb!...such a nice words! great!

    ReplyDelete