Thursday 17 November 2011

ஊன் சிறப்பு

முன்பதிவு செய்த பயண தினத்தில்
வாழும் இடம் மாறும் வைபவத்தில்

வழியப்பனுப்ப வந்தோரில் வகைக்கு ஒன்றாய்
ஏழு பேரேனும் தேவை இருக்கையில் இருத்த.


முன் அனுபவம் உள்ளவர் பின் தலை பிடிக்க
மூவிரண்டு பேர்கள் முழுவதும் தூக்க
பச்சை மூங்கிலை படுக்கை ஆக்கி
கச்சை புதியதாய் முழுதும் போர்த்தி
பாராத  தேசத்திற்கு போகும் - திரும்பி
வாராது உருவம்எந் நாளும்.


காற்றிருந்த பாதையெங்கும் காலம் அடைத்தோ
சேர்த்திருந்த சுமைகளின் பாரம் பொருட்டோ
உயிர் நீத்த உடலில் பன்மடங்கு கூடும் எடை
யுகங்கள் கடந்தாலும் உண்டோ இதற்கு விடை?


நெஞ்சில் நெய்யூற்றி நெடுந்தீ மூட்டியபின்
மின்கலத்தின் உள்விட்டோ  மிதமான விறகிட்டோ
ஒட்டி உறவாடிய ஒருகோடி நிமிடங்களை
கட்டிப்  பொட்டலமாய் கையிலே தந்திடுவார்.


உடல் மெல்ல சாம்பலாகும் ஒரு நொடி காட்சி
காலமே கடவுள் என்பதன் சாட்சி
மிஞ்சிடும் நினைவுகள் உணர்வின் மாட்சி

இறப்புகளில் சிறப்பது இறைவனின் ஆட்சி.

1 comment:

  1. மனதை பிசைகிறது

    ReplyDelete